57. வெருவந்த செய்யாமை |
561. | தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் |
| ஒத்தாங் கொறுப்பது வேந்து. |
|
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும். |
562. | கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம் |
| நீங்காமை வேண்டு பவர். |
|
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும். |
563. | வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் |
| ஒருவந்தம் ஒல்லைக் கெடும். |
|
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும். |
564. | இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் |
| உறைகடுகி ஒல்லைக் கெடும். |
|
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும். |
565. | அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் |
| பேஎய்கண் டன்ன துடைத்து. |
|
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும். |