பக்கம் எண் :

திருக்குறள்115பொருள்

58. கண்ணோட்டம்
 

571.

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

 

இந்த  உலகம்,   அன்பும்   இரக்கமும்    இணைந்த  கண்ணோட்டம்
எனப்படுகிற  பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை
அடைகிறது.
 

572.

கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

 

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும்
உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.
 

573.

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்

கண்ணோட்டம் இல்லாத கண்.

 

இரக்க  உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத
கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.
 

574.

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்

கண்ணோட்டம் இல்லாத கண்.

 

அகத்தில்   அன்பையும்  இரக்கத்தையும்   சுரக்கச்  செய்யாத கண்கள்
முகத்தில்   உள்ளவைபோல்  தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும்
இல்லாதவைகளாகும்.
 

575.

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்

புண்ணென் றுணரப் படும்.

 

கருணையுள்ளம்  கொண்டவருடைய  கண்ணே கண் என்று கூறப்படும்.
இல்லையானால் அது கண் அல்ல; புண்.