பக்கம் எண் :

திருக்குறள்117பொருள்

59. ஒற்றாடல்
 

581.

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.

 

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும்  அறநூலும்  ஓர்
அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.
 

582.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.

 

நண்பர், பகைவர், நடுநிலையாளர்  ஆகிய  எல்லாரிடத்திலும்  நிகழும்
எல்லா   நிகழ்வுகளையும்,  எல்லாக்  காலங்களிலும்   ஒற்றரைக் கொண்டு
விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.
 

583.

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றங் கொளக்கிடந்த தில்.

 

நாட்டு   நிலவரத்தை    ஒற்றர்களைக்   கொண்டு   அறிந்து  அதன்
விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே
இல்லை.
 

584.

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்

கனைவரையும் ஆராய்வ தொற்று.

 

ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை  பார்ப்பவர்கள்,  வேண்டியவர்,
வேண்டாதவர்,    சுற்றத்தார்    என்றெல்லாம்    பாகுபாடு    கருதாமல்
பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.
 

585.

கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.

 

சந்தேகப்பட   முடியாத    தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப்
பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில்  உள்ளதை
வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.