பக்கம் எண் :

அரசியல்118கலைஞர் உரை

586.

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்

தென்செயினுஞ் சோர்வில தொற்று.

 

ஆராய்ந்திட  வந்த   நிகழ்வில்  தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்
கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம்  வரினும்
தாங்கிக் கொண்டு, தம்மை   யாரென்று   வெளிப்படுத்திக் கொள்ளாதவரே
சிறந்த ஒற்றர்.
 

587.

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பா டில்லதே ஒற்று.

 

மற்றவர்கள்  மறைவாகக்   கூடிச்செய்யும்  காரியங்களை, அவர்களுடன்
இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத்  தெளிவாகத்
தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.
 

588.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

 

ஓர் உளவாளி, தனது திறமையினால்  அறிந்து  சொல்லும்  செய்தியைக்
கூட   மற்றோர்   உளவாளி   வாயிலாகவும்  அறிந்து வரச் செய்து, இரு
செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே  அது,  உண்மையா  அல்லவா
என்ற முடிவுக்கு வரவேண்டும்.
 

589.

ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும்.

 

ஓர்  ஒற்றரை  மற்றோர்  ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை
இயங்கவைத்து  அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக்
கொள்ளலாம்.
 

590.

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்

புறப்படுத்தான் ஆகும் மறை.

 

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச்  சிறப்புச் செய்தால், ஒளிவு
மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.