பக்கம் எண் :

அரசியல்120கலைஞர் உரை

596.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

 

நினைப்பதெல்லாம்  உயர்ந்த  நினைப்பாகவே இருக்க வேண்டும். அது
கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
 

597.

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு.

 

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி
தளராமல்    இருப்பதுபோல,  ஊக்கமுடையவர்கள்,  அழிவே  வந்தாலும்
அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
 

598.

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.

 

அள்ளி  வழங்கும்  ஆர்வம்  இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்
பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.
 

599.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.

 

உருவத்தைவிட  ஊக்கமே   வலிவானது   என்பதற்கு  எடுத்துக்காட்டு:
கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத்
தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.
 

600.

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்

மரமக்க ளாதலே வேறு.

 

மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில்  மனிதர்களாகக்
காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.