பக்கம் எண் :

திருக்குறள்121பொருள்

61. மடி இன்மை
 

601.

குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.

 

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல்
குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.
 

602.

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.

 

குலம்   சிறக்க  வேண்டுமானால், சோம்பலை  ஒழித்து,  ஊக்கத்துடன்
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 

603.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியுந் தன்னினு முந்து.

 

அறிவும்  அக்கறையுமில்லாத  சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன்
அழிந்து போய் விடும்.
 

604.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.

 

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும்  பெருகிடும்;
குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.
 

605.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.

 

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு  மீறிய  தூக்கம் ஆகிய
நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!