62. ஆள்வினை உடைமை |
611. | அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் |
| பெருமை முயற்சி தரும். |
|
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும். |
612. | வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை |
| தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு. |
|
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும். |
613. | தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே |
| வேளாண்மை என்னுஞ் செருக்கு. |
|
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும். |
614. | தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை |
| வாளாண்மை போலக் கெடும். |
|
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. |
615. | இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் |
| துன்பம் துடைத்தூன்றும் தூண். |
|
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான். |