பக்கம் எண் :

திருக்குறள்127பொருள்

64. அமைச்சு
 

631.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்ட தமைச்சு.

 

உரிய   கருவி,   உற்ற   காலம்,   ஆற்றும்  வகை,  ஆற்றிடும் பணி
ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.
 

632.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு.

 

அமைச்சரவை    என்பது,  துணிவுடன்  செயல்படுதல்,    குடிகளைப்
பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட  அறிதல்,  அயராத
முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.
 

633.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு.

 

அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத்
துணையானவர்களைப்  பிரித்தல்,  நாட்டுக்குத்  துணையாக  இருப்போரின்
நலன்  காத்தல்,  பிரிந்து  சென்று  பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக்
கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.
 

634.

தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்ல தமைச்சு.

 

ஒரு     செயலைத்    தேர்ந்தெடுத்தலும்,  அதனை    நிறைவேற்றிட
வழிவகைகளை ஆராய்ந்து  ஈடுபடுதலும்,   முடிவு  எதுவாயினும்  அதனை
உறுதிபடச் சொல்லும்   ஆற்றல்   படைத்திருத்தலும்   அமைச்சருக்குரிய
சிறப்பாகும்.
 

635.

அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

 

அறநெறி   உணர்ந்தவராகவும்,    சொல்லாற்றல்   கொண்டவராகவும்.
செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள்   கூறக்கூடிய
துணையாக விளங்க முடியும்.