பக்கம் எண் :

அமைச்சியல்128கலைஞர் உரை

636.

மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்

யாவுள முன்னிற் பவை.

 

நூலறிவுடன்  இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால்
எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.
 

637.

செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்

தியற்கை அறிந்து செயல்.

 

செயலாற்றல்   பற்றிய    நூலறிவைப்    பெற்றிருந்தாலும்,     உலக
நடைமுறைகளை உணர்ந்து  பார்த்தே  அதற்கேற்றவாறு   அச்செயல்களை
நிறைவேற்ற வேண்டும்.
 

638.

அறிகொன் றறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்.

 

சொன்னதையும்    கேட்காமல்,    சொந்த    அறிவும்    இல்லாமல்
இருப்போர்க்கு,    அருகிலுள்ள   அமைச்சர்கள்தான்   துணிவோடு நல்ல
யோசனைகளைக் கூற வேண்டும்.
 

639.

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்.

 

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர்
அருகிலிருப்பதை விட  எழுபது  கோடி  எதிரிகள்  பக்கத்தில்  இருப்பது
எவ்வளவோ மேலாகும்.
 

640.

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்

திறப்பா டிலாஅ தவர்.

 

முறைப்படித்     தீட்டப்படும்    திட்டங்கள்கூடச்   செயல்    திறன்
இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.