பக்கம் எண் :

திருக்குறள்129பொருள்

65. சொல்வன்மை
 

641.

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத் துள்ளதூஉம் அன்று.

 

சொல்வன்மைக்கு  உள்ள   சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது
செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.
 

642.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

 

ஆக்கமும்   அழிவும்   சொல்லால்   ஏற்படும் என்பதால், எந்தவொரு
சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.
 

643.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.

 

கேட்போரைக்   கவரும்    தன்மையுடையதாகவும்,    கேட்காதவரும்
தேடிவந்து   விரும்பிக்   கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை
எனப்படும்.
 

644.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங் கில்.

 

காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச்
சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும்
இல்லை.
 

645.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

 

இந்தச்    சொல்லை   இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த
பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.