பக்கம் எண் :

அமைச்சியல்130கலைஞர் உரை

646.

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.

 

மற்றவர்கள்    விரும்பிக்   கேட்டு   உணரும்படியாகக் கருத்துகளைச்
சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின்  பயனை  ஆராய்ந்து  ஏற்றுக்
கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.
 

647.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

 

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும்,  அஞ்சா
நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை  எதிர்த்து  எவராலும்  வெல்ல
முடியாது.
 

648.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

 

வகைப்படுத்தியும்,    சுவையாகவும்      கருத்துகளைச்     சொல்லும்
வல்லமையுடையோர்  சுட்டிக்காட்டும்  பணியை,   உலகத்தார் உடனடியாக
நிறைவேற்ற முனைவார்கள்.
 

649.

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.

 

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட
இயலாதவர்கள்தான்    பல     சொற்களைத்   திரும்பத் திரும்பக் கூறிக்
கொண்டிருப்பார்கள்.
 

650.

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற

துணர விரிந்துரையா தார்.

 

கற்றதைப் பிறர் உணர்ந்து  கொள்ளும்  வகையில்  விளக்கிச்  சொல்ல
முடியாதவர்,   கொத்தாக   மலர்ந்திருந்தாலும்   மணம்  கமழாத மலரைப்
போன்றவர்.