பக்கம் எண் :

திருக்குறள்131பொருள்

66. வினைத் தூய்மை
 

651.

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.

 

ஒருவருக்குக்    கிடைக்கும்    துணைவர்களால்   வலிமை  பெருகும்;
அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.
 

652.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

 

புகழையும்,   நன்மையையும்  தராத  தூய்மையற்ற  செயல்களை  எந்த
நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
 

653.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை

ஆஅது மென்னு மவர்.

 

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய
செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.
 

654.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

 

தெளிவான   அறிவும்   உறுதியும்  கொண்டவர்கள்  துன்பத்திலிருந்து
விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
 

655.

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

 

‘என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய
காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால்   அப்படிச்  செய்து   விட்டாலும்
அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.