பக்கம் எண் :

அமைச்சியல்134கலைஞர் உரை

666.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

 

எண்ணியதைச்  செயல்படுத்துவதில்  உறுதி உடையவர்களாக இருந்தால்
அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
 

667.

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்

கச்சாணி யன்னார் உடைத்து.

 

உருவத்தால்    சிறியவர்கள்   என்பதற்காக   யாரையும் கேலி செய்து
அலட்சியப்படுத்தக் கூடாது.  பெரிய   தேர்   ஓடுவதற்குக்   காரணமான
அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.
 

668.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.

 

மனக்குழப்பமின்றித்  தெளிவாக   முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத்
தளர்ச்சியும், தாமதமும் இடையே   ஏற்படாமல்   விரைந்து   நிறைவேற்ற
வேண்டும்.
 

669.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.

 

இன்பம்   தரக்கூடிய   செயல்  என்பது, துன்பம் வந்தாலும் அதனைப்
பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
 

670.

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டா துலகு.

 

எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும்
செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.