பக்கம் எண் :

திருக்குறள்135பொருள்

68. வினை செயல்வகை
 

671.

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

 

ஒரு  செயலில்  ஈடுபட  முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும்
சாதக பாதகங்கள்   பற்றிய  ஆராய்ச்சியும்  முடிவடைந்திருக்க வேண்டும்.
முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.
 

672.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.

 

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத்  தாமதித்துச் செய்யலாம்;
ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.
 

673.

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.

 

இயலும்  இடங்களில்  எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத
இடமாயின்    அதற்கேற்ற   வழியை   அறிந்து அந்தச் செயலை முடிக்க
வேண்டும்.
 

674.

வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்.

 

ஏற்ற  செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக  முடிக்காமல்
விட்டுவிட்டால் அது நெருப்பை அரை  குறையாக  அணைத்தது  போலக்
கேடு விளைவிக்கும்.
 

675.

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

 

ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள்,
ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப்  போகும்  செயல்முறை,  உகந்த இடம்
ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.