69. தூது |
681. | அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் |
| பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. |
|
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும். |
682. | அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் |
| கின்றி யமையாத மூன்று. |
|
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை. |
683. | நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் |
| வென்றி வினையுரைப்பான் பண்பு. |
|
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும். |
684. | அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் |
| செறிவுடையான் செல்க வினைக்கு. |
|
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும். |
685. | தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி |
| நன்றி பயப்பதாந் தூது. |
|
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். |