பக்கம் எண் :

திருக்குறள்141பொருள்

71. குறிப்பறிதல்
 

701. 

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

 

மாறாநீர் வையக் கணி.
 

ஒருவர்  எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார்
என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான்.
 

702.

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் 

 

தெய்வத்தோ டொப்பக் கொளல்.
 

ஒருவன் மனத்தில்  உள்ளதைத் தெளிவாக உணர்ந்து  கொள்ளக்கூடிய
சக்தி தெய்வத்திற்கே  உண்டு  என்று கூறினால், அந்தத் திறமை படைத்த
மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.
 

703.

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் 

யாது கொடுத்துங் கொளல்.
 

ஒருவரின்  முகக்  குறிப்பைக்  கொண்டே  அவரது உள்ளக் குறிப்பை
அறிந்து   கொள்ளக்கூடிய   ஆற்றலுடையவரை,  எந்தப்   பொறுப்பைக்
கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.
 

704.

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை 

உறுப்போ ரனையரால் வேறு.
 

உறுப்புகளால் வேறுபடாத  தோற்றமுடையவராக  இருப்பினும்,  ஒருவர்
மனத்தில்   உள்ளதை,   அவர்   கூறாமலே  உணரக்கூடியவரும்,  உணர
முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.
 

705.

குறிப்பிற் குறிப்புணரா ஆயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்.
 

ஒருவரது  முகக்குறிப்பு,  அவரது   உள்ளத்தில்  இருப்பதைக்  காட்டி
விடும்  என்கிறபோது,  அந்தக்  குறிப்பை  உணர்ந்து  கொள்ள  முடியாத
கண்கள் இருந்தும் என்ன பயன்?