பக்கம் எண் :

அமைச்சியல்142கலைஞர் உரை

706.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.
 

கண்ணாடி,  தனக்கு  எதிரில்  உள்ளதைக்  காட்டுவதுபோல  ஒருவரது
மனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்.
 

707.

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும்.
 

உள்ளத்தில்  உள்ள   விருப்பு   வெறுப்புகளை   முந்திக்   கொண்டு
வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.
 

708.

முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி

உற்ற துணர்வார்ப் பெறின்.
 

அகத்தில் உள்ளதை  உணர்ந்து  கொள்ளும்  திறமையிருப்பின், அவர்,
ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.
 

709.

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின்.
 

பார்வையின்    வேறுபாடுகளைப்    புரிந்துகொள்ளக்   கூடியவர்கள்,
ஒருவரின்  கண்களைப்  பார்த்தே  அவர்   மனத்தில்  இருப்பது  நட்பா,
பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.
 

710.

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்

கண்ணல்ல தில்லை பிற.
 

நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்குப் பிறரின்   மனத்தில்   உள்ளதை
அளந்தறியும்  கோலாகப்  பயன்படுவது அவரது கண்  அல்லாமல்  வேறு
எதுவுமில்லை.