பக்கம் எண் :

அமைச்சியல்144கலைஞர் உரை

716.

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
 

அறிவுத்திறனால்  பெருமை  பெற்றோர்   முன்னிலையில்   ஆற்றிடும்
உரையில்  குற்றம் ஏற்படுமானால்,  அது  ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து
வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
 

717.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொற்றெரிதல் முன்னர் இழுக்கு.
 

மாசற்ற  சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர்
கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.
 

718.

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
 

உணர்ந்து  கொள்ளக்கூடிய  ஆற்றல்  உள்ளவர்களின்  முன்னிலையில்
பேசுதல்,  தானே  வளரக்கூடிய பயிர்  உள்ள  பாத்தியில் நீர் பாய்ச்சுவது
போலப் பயன் விளைக்கும்.
 

719.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச்சொல்லு வார்.
 

நல்லோர்  நிறைந்த  அவையில்  மனத்தில்  பதியும்படி கருத்துகளைச்
சொல்லும்  வல்லமை   பெற்றவர்கள், அறிவற்ற  பொல்லாதோர்   உள்ள
அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம்.
 

720.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்

அல்லார்முன் கோட்டி கொளல்.
 

அறிவுள்ளவர்கள்,    அறிவில்லாதவர்களின்    அவையில்   பேசுவது,
தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.