பக்கம் எண் :

திருக்குறள்145பொருள்

73. அவை அஞ்சாமை
 

721.

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.
 

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின்
வகையறியும்  ஆற்றல்  உடையவராயிருப்பின்   பிழை   நேருமாறு  பேச
மாட்டார்கள்.
 

722.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.
 

கற்றவரின்  முன் தாம்  கற்றவற்றை  அவருடைய மனத்தில் பதியுமாறு
சொல்ல   வல்லவர்,  கற்றவர்   எல்லாரினும்   மேலானவராக   மதித்துச்
சொல்லப்படுவார்.
 

723.

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத் தஞ்சா தவர்.
 

அமர்க்களத்தில்   சாவுக்கும்   அஞ்சாமல்   போரிடுவது   பலருக்கும்
எளிதான  செயல், அறிவுடையோர்  நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல்
பேசக்கூடியவர் சிலரேயாவர்.
 

724.

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.
 

அறிஞர்களின்  அவையில்  நாம்   கற்றவைகளை   அவர்கள்  ஏற்றுக்
கொள்ளும்   அளவுக்கு    எடுத்துச்   சொல்லி    நம்மைவிட   அதிகம்
கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 

725.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
 

அவையில்  பேசும்பொழுது  குறுக்கீடுகளுக்கு   அஞ்சாமல்  மறுமொழி
சொல்வதற்கு ஏற்ற  வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத்
திறமும் கற்றிருக்க வேண்டும்.