பக்கம் எண் :

திருக்குறள்149பொருள்

75. அரண்
 

741.

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.
 

பகைவர்  மீது  படையெடுத்துச்  செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்;
பகைவர்க்கு அஞ்சித்  தம்மைப்  பாதுகாத்துக்  கொள்ள முனைவோர்க்கும்
கோட்டை பயன்படும்.
 

742.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.
 

ஆழமும்  அகலமும்  கொண்ட  அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும்
மலைத்தொடர்,   அடர்ந்திருக்கும்   காடு    ஆகியவற்றை    உடையதே
அரணாகும்.
 

743.

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல்.
 

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய
நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.
 

744.

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண்.
 

உட்பகுதி பரந்த இடமாக  அமைந்து, பாதுகாக்கப்  படவேண்டிய பகுதி
சிறிய இடமாக  அமைந்து,  கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே
அரண் எனப்படும்.
 

745.

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கெளிதாம் நீர தரண்.
 

முற்றுகையிட்டுக்    கைப்பற்ற      முடியாமல்,     உள்ளேயிருக்கும்
படையினர்க்கும் மக்களுக்கும்  வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர்
புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.