பக்கம் எண் :

கூழியல்152கலைஞர் உரை

756.

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.
 

வரியும்,  சுங்கமும்,  வெற்றி  கொள்ளப்பட்ட  பகை  நாடு  செலுத்தும்
கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.
 

757.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு.
 

அன்பு  என்கிற  அன்னை  பெற்றெடுக்கும்  அருள் என்கிற குழந்தை,
பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.
 

758.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.
 

தன்  கைப்பொருளைக்கொண்டு  ஒரு   தொழில்   செய்வது  என்பது
யானைகள்  ஒன்றோடொன்று   போரிடும்   போது   இடையில்   சிக்கிக்
கொள்ளாமல்  அந்தப்  போரை  ஒரு  குன்றின்  மீது நின்று காண்பதைப்
போன்று இலகுவானது.
 

759.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃதனிற் கூரிய தில்.
 

பகைவரின் செருக்கை அழிக்கும்  தகுதியான  கருவி பொருளைத் தவிர
வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.
 

760.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு.
 

அறம்  பொருள்  இன்பம்  எனும்  மூன்றினுள்  பொருந்தும்  வழியில்
பொருளை  மிகுதியாக  ஈட்டியவர்களுக்கு  ஏனைய இரண்டும் ஒன்றாகவே
எளிதில் வந்து சேரும்.