பக்கம் எண் :

திருக்குறள்153பொருள்

77. படை மாட்சி
 

761.

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை.
 

எல்லா  வகைகளும்  நிறைந்ததாகவும்,  இடையூறுகளுக்கு  அஞ்சாமல்
போரிடக்கூடியதாகவும்  உள்ள  படை   ஓர்   அரசின்   மிகச்   சிறந்த
செல்வமாகும்.
 

762.

உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது.
 

போரில்    சேதமுற்று     வலிமை     குன்றியபோதும்,     எவ்வித
இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு
அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.
 

763.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.
 

எலிகள் கூடி  கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின்
மூச்சொலிக்கு  முன்னால்   நிற்க   முடியுமா?   அதுபோலத்தான்  வீரன்
வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.
 

764.

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை.
 

எந்த    நிலையிலும்   அழியாததும்,   சூழ்ச்சிக்கு    இரையாகாததும்,
பரம்பரையாகவே  பயமற்ற  உறுதி  உடையதும்தான்  உண்மையான படை
எனப்படும்.
 

765.

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.
 

உயிரைப்  பறிக்கும்  சாவு   எதிர்கொண்டு   வந்தாலும்   அஞ்சாமல்
ஒன்றுபட்டு  எதிர்த்து   நிற்கும்  ஆற்றல்  உடையதற்கே  படை   என்ற
பெயர் பொருந்தும்.