பக்கம் எண் :

திருக்குறள்155பொருள்

78. படைச் செருக்கு
 

771.

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்னின்று கல்நின் றவர்.
 

போர்க்களத்து  வீரன்  ஒருவன்,  "பகைவர்களே   என்   தலைவனை
எதிர்த்து  நிற்காதீர்; அவனை  எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்"
என முழங்குகிறான்.
 

772.

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது
 

வலிவு மிகுந்த யானைக்குக்  குறிவைத்து,  அந்தக் குறி தப்பினாலும்கூட
அது, வலிவற்ற முயலுக்குக்  குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும்
சிறப்புடையது.
 

773.

பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.
 

பகைவர்க்கு  அஞ்சாத  வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும்.
அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது  அதைத் தீர்க்க உதவிடுவது
ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.
 

774.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.
 

கையிலிருந்த  வேலினை  யானையின்  மீது  வீசி விட்டதால் களத்தில்
போரினைத்  தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு
வேல்  பாய்ந்திருப்பது  கண்டு  மகிழ்ந்து  அதனைப்  பறித்துப்  பகையை
எதிர்த்திடுகின்றான்.
 

775.

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்

ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.
 

களத்தில்  பகைவர்  வீசிடும்  வேல் பாயும்போது  விழிகளை இமைத்து
விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு ஒப்பாகும்.