பக்கம் எண் :

திருக்குறள்159பொருள்

80. நட்பாராய்தல்
 

791.

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.
 

ஆராய்ந்து  பாராமல்  கொண்டிடும் தீய  நட்பு,  அந்த  நட்பிலிருந்து
விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.
 

792.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.
 

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு,
கடைசியாக  ஒருவர்  சாவுக்குக்   காரணமாகிற   அளவுக்குத்  துயரத்தை
உண்டாக்கி விடும்.
 

793.

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.
 

குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத
இயல்புகள்  எவை? என்று  அனைத்தையும் அறிந்தே  ஒருவருடன் நட்புக்
கொள்ள வேண்டும்.
 

794.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
 

பழிவந்து  சேரக்  கூடாது   என்ற   அச்ச   உணர்வுடன்   நடக்கும்
பண்பார்ந்த  குடியில்  பிறந்தவருடைய   நட்பை   எந்த   வகையிலாவது
பெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும்.
 

795.

அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய

வல்லார்நட் பாய்ந்து கொளல்.
 

தவறு  செய்கின்றவர்  கண்ணீர்  விடுமளவுக்குக்  கண்டித்து, அறிவுரை
வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண
வேண்டும்.