பக்கம் எண் :

நட்பியல்160கலைஞர் உரை

796.

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்
 

தீமை  வந்தால் அதிலும் ஒரு  நன்மை  உண்டு.  அந்தத்  தீமைதான்
நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.
 

797.

ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.
 

ஒருவருக்குக்   கிடைத்த   நற்பயன்   என்பது  அவர்   அறிவில்லாத
ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.
 

798.

உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
 

ஊக்கத்தைச்  சிதைக்கக்கூடிய  செயல்களையும்,  துன்பம்  வரும்போது
விலகிவிடக் கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்க்காமலே இருந்து விட
வேண்டும்.
 

799.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.
 

ஒருவர்  கொலைக்கு  ஆளாகும் போது  கூட,  தனக்குக்  கேடு வந்த
நேரம்  கைவிட்டு  ஒதுங்கி  ஓடிவிட்ட  நண்பர்களை  நினைத்து விட்டால்
அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.
 

800.

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.
 

மனத்தில்  மாசு இல்லாதவர்களையே  நண்பர்களாகப் பெற வேண்டும்.
மாசு உள்ளவர்களின் நட்பை, விலைகொடுத்தாவது விலக்கிடவேண்டும்.