பக்கம் எண் :

நட்பியல்162கலைஞர் உரை

806.

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
 

நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின்
இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.
 

807.

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர்.
 

தம்முடன்  பழகியவர்கள்  தமக்கே  எதிராக அழிவுதரும் காரியத்தைச்
செய்தாலும்கூட  அன்பின்  அடிப்படையில்  நட்புக் கொண்டவர் அதற்காக
அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.
 

808.

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின்.
 

நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத
அளவுக்கு  நம்பிக்கையான   நட்புரிமை  கொண்டவரிடத்திலேயே  அந்த
நண்பர்கள்   தவறாக    நடந்து   கொண்டால்   அவர்களுடன்   நட்புக்
கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.
 

809.

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.
 

தொன்றுதொட்டு  உரிமையுடன்  பழகிய   நட்புறவைக்   கைவிடாமல்
இருப்பவரை உலகம் போற்றும்.
 

810.

விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.
 

பழமையான  நண்பர்கள்  தவறு  செய்த   போதிலும்,   அவர்களிடம்
தமக்குள்ள  அன்பை  நீக்கிக்  கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப்
பாராட்டுவார்கள்.