பக்கம் எண் :

திருக்குறள்163பொருள்

82. தீ நட்பு
 

811.

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.
 

நல்ல   பண்பு   இல்லாதவர்கள்   அன்பு    வெள்ளத்தில்   நம்மை
மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும்  அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக்
கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.
 

812.

உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்.
 

தமக்குப்    பயன்கிடைக்கும்போது    நண்பராக   இருந்து   விட்டுப்
பயனில்லாதபோது  பிரிந்து விடுகின்றவர்களின்  நட்பு  இருந்தால் என்ன?
இழந்தால்தான் என்ன?
 

813.

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.
 

பயனை   எண்ணிப்பார்த்து   அதற்காகவே   நட்புக்   கொள்பவரும்,
விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஒரே மாதிரியானவர்களே
ஆவார்கள்.
 

814.

அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.
 

போர்க்களத்தில்  கீழே   தள்ளி  விட்டுத்   தப்பித்து   ஓடிப்போகும்
குதிரையைப்  போன்றவர்களின்  நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து
இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.
 

815.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.
 

கீழ்மக்களின்  நட்பு, பாதுகாப்பாக  அமையாத  தீயதன்மை கொண்டது
என்பதால்,  அவர்களுடன்  நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே
நலம்.