பக்கம் எண் :

திருக்குறள்165பொருள்

83. கூடா நட்பு
 

821.

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.
 

மனதார  இல்லாமல்  வெளியுலகிற்கு   நண்பரைப்போல்  நடிப்பவரின்
நட்பானது, ஒரு  கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது
இரும்பைத்  துண்டாக்கத்  தாங்கு  பலகை  போல்  இருக்கும்  பட்டடைக்
கல்லுக்கு ஒப்பாகும்.
 

822.

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.
 

உற்றாராக   இல்லாமல்   உற்றார்   போல   நடிப்பவர்களின்   நட்பு,
மகளிருக்குரிய நற்பண்பு  இல்லாமல்  அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும்
விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.
 

823.

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

ஆகுதல் மாணார்க் கரிது.
 

அரிய  நூல்கள்  பலவற்றைக்  கற்றிருந்த   போதிலும்,   பகையுணர்வு
படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
 

824.

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.
 

சிரித்துப்  பேசி  நம்மைச்  சீரழிக்க  நினைக்கும்  வஞ்சகரின் நட்புக்கு
அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.
 

825.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற் றன்று.
 

மனம்  வேறு செயல் வேறாக  இருப்பவர்களின்  வார்த்தைகளை நம்பி
எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.