பக்கம் எண் :

நட்பியல்166கலைஞர் உரை

826.

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.
 

பகைவர்,   நண்பரைப்போல   இனிமையாகப்  பேசினாலும்,   அந்தச்
சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.
 

827.

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.
 

பகைவரிடம்   காணப்படும்    சொல்வணக்கம்    என்பது   வில்லின்
வணக்கத்தைப் போல்  தீங்கு விளைவிக்கக்  கூடியது  என்பதால், அதனை
நம்பக் கூடாது.
 

828.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.
 

பகைவர்கள்  வணங்குகின்ற   போதுகூட  அவர்களின்   கைக்குள்ளே
கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே,  அவர்களின், கண்ணீர் கொட்டி
அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
 

829.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

நட்பினுட் சாப்புல்லற் பாற்று.
 

வெளித்தோற்றத்திற்கு  நண்பரைப்போல்  நகைமுகம்  காட்டி மகிழ்ந்து,
உள்ளுக்குள்  பகையுணர்வுடன்   இகழ்பவரின்  நட்பை,   நலிவடையுமாறு
செய்திட நாமும் அதே முறையைக் கடைப் பிடிக்க வேண்டும்.
 

830.

பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்

டகநட் பொரீஇ விடல்.
 

பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல்
முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட
வேண்டும்.