பக்கம் எண் :

திருக்குறள்169பொருள்

85. புல்லறிவாண்மை
 

841.

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையா துலகு.
 

அறிவுப்   பஞ்சம்தான்  மிகக்   கொடுமையான   பஞ்சமாகும்.   மற்ற
பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.
 

842.

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்

இல்லை பெறுவான் தவம்.
 

அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன்
வழங்குவதற்குக்  காரணம்  வேறொன்றுமில்லை;   அது   அப்பொருளைப்
பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருத வேண்டும்.
 

843.

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.
 

எதிரிகளால்கூட  வழங்க  முடியாத  வேதனையை, அறிவில்லாதவர்கள்
தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.
 

844.

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு.
 

ஒருவன்  தன்னைத்தானே  அறிவுடையவனாக   மதித்துக்  கொள்ளும்
ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
 

845.

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.
 

அறிந்து    கொள்ளாதவைகளையும்    அறிந்தவர்   போல   ஒருவர்
போலித்தனமாகக்  காட்டிக்  கொள்ளும்  போது, அவர் ஏற்கனவே எந்தத்
துறையில் திறமையுடையவராக  இருக்கிறாரோ அதைப்  பற்றிய சந்தேகமும்
மற்றவர்களுக்கு உருவாகும்.