பக்கம் எண் :

திருக்குறள்177பொருள்

89. உட்பகை
 

881.

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்.
 

இனிமையாகத்  தெரியும்   நிழலும்   நீரும்கூடக்  கேடு  விளைவிக்கக்
கூடியவையாக   இருந்தால்   அவை   தீயவைகளாகவே     கருதப்படும்.
அதுபோலவேதான்   உற்றார் உறவினராக   உள்ளவர்களின்  உட்பகையும்
ஆகும்.
 

882.

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.
 

வெளிப்படையாக  எதிரே வரும் பகைவர்களைவிட  உறவாடிக் கெடுக்க
நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
 

883.

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.
 

உட்பகைக்கு  அஞ்சி  ஒருவன்   தன்னைப்   பாதுகாத்துக்   கொள்ள
வேண்டும்.  இல்லாவிட்டால்   ஒரு  சோதனையான   நேரத்தில்   பச்சை
மண்பாண்டத்தை  அறுக்கும்   கருவிபோல   அந்த  உட்பகை    அழிவு
செய்துவிடும்.
 

884.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

ஏதம் பலவும் தரும்.
 

மனம்  திருந்தாத   அளவுக்கு   உட்பகை    விளைவிக்கும்  உணர்வு
ஒருவனுக்கு  ஏற்பட்டுவிடுமானால்,  அது  அவனைச்  சேர்ந்தவர்களையே
பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
 

885.

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்.
 

நெருங்கிய    உறவினருக்கிடையே     தோன்றும்    உட்பகையானது
அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.