பக்கம் எண் :

திருக்குறள்179பொருள்

90. பெரியாரைப் பிழையாமை
 

891.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை.
 

ஒரு  செயலைச்  செய்து  முடிக்க  வல்லவரின்  ஆற்றலை   இகழாது
இருந்தால்,  அதுவே தம்மைக் காத்திடும்  காவல்கள் அனைத்தையும் விடச்
சிறந்த காவலாக அமையும்.
 

892.

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்

பேரா இடும்பை தரும்.
 

பெரியோர்களை    மதிக்காமல்     நடந்து    கொண்டால்   நீங்காத
பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
 

893.

கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு.
 

ஒருவன்,  தன்னைத்தானே  கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை
நினைத்த  மாத்திரத்தில்  அழிக்கக்  கூடிய   ஆற்றலுடையவர்களை  யார்
பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.
 

894.

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்

காற்றாதார் இன்னா செயல்.
 

எந்தத்  துன்பத்தையும்  தாங்கக்  கூடிய  ஆற்றல் படைத்தவர்களுடன்,
சிறு  துன்பத்தையும்  தாங்க   முடியாதவர்கள்  மோதினால்   அவர்களே
தங்களின்  முடிவுகாலத்தைக் கையசைத்துக்  கூப்பிடுகிறார்கள் என்று தான்
பொருள்.
 

895.

யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.
 

மிக்க  வலிமை  பொருந்திய   அரசின்  கோபத்திற்கு  ஆளானவர்கள்
தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ
முடியாது.