பக்கம் எண் :

குடியியல்192கலைஞர் உரை

956.

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்துமென் பார்.
 

மாசற்ற  பண்புடன்  வாழ்வதாகக்  கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக
நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
 

957.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
 

பிறந்த  குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு
மறைவு     ஏதுமின்றி,    வானத்து    நிலவில்   உள்ள    குறைபோல
வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.
 

958.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.
 

என்னதான் அழகும் புகழும்  உடையவனாக இருந்தாலும் அன்பு எனும்
ஒரு  பண்பு  இல்லாதவனாக  இருந்தால்  அவன்   பிறந்த  குலத்தையே
சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
 

959.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
 

விளைந்த  பயிரைப்  பார்த்தாலே  இது  எந்த  நிலத்தில்  விளைந்தது
என்று  அறிந்து  கொள்ளலாம்.  அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக்
கேட்டே  அவர்  எத்தகைய   குடியில்  பிறந்தவர்  என்பதை  உணர்ந்து
கொள்ளலாம்.
 

960.

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.
 

தகாத   செயல்   புரிந்திட   அஞ்சி   நாணுவதும்,   எல்லோரிடமும்
ஆணவமின்றிப்  பணிவுடன்  நடந்து  கொள்வதும்  ஒருவரின் நலத்தையும்
அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.