பக்கம் எண் :

குடியியல்194கலைஞர் உரை

966.

புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்

றிகழ்வார்பின் சென்று நிலை.
 

இகழ்வதையும்  பொறுத்துக்கொண்டு,  மானத்தை  விட்டுவிட்டு ஒருவர்
பின்னே  பணிந்து   செல்வதால்  என்ன   புகழ்  கிடைக்கும்?   இல்லாத
சொர்க்கமா கிடைக்கும்?
 

967.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.
 

தன்னை  மதிக்காதவரின்  பின்னால்  சென்று  உயிர்  வாழ்வதைவிடச்
செத்தொழிவது எவ்வளவோ மேல்.
 

968.

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து.
 

சாகாமலே  இருக்க   மருந்து   கிடையாது.   அப்படி இருக்கும்போது
உயிரைவிட    நிலையான     மானத்தைப்    போற்றாமல்,    வாழ்க்கை
மேம்பாட்டுக்காக  ஒருவர்,  தமது  பெருமையைக்  குறைத்துக்  கொள்வது
இழிவான செயலாகும்.
 

969.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.
 

உடலில்  உள்ள  உரோமம்  நீக்கப்பட்டால்  உயிர் வாழாது கவரிமான்
என்பார்கள்.  அதுபோல்  மானம்  அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள்
உயிரையே விட்டு விடுவார்கள்.
 

970.

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழு தேத்தும் உலகு.
 

மானம்  அழியத்தக்க  இழிவு   வந்ததே   என்று  உயிரை  மாய்த்துக்
கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.