1026. | நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த |
| இல்லாண்மை ஆக்கிக் கொளல். |
|
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார். |
1027. | அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் |
| ஆற்றுவார் மேற்றே பொறை. |
|
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு. |
1028. | குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து |
| மானங் கருதக் கெடும். |
|
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைந்துவிடும். |
1029. | இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் |
| குற்ற மறைப்பான் உடம்பு. |
|
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான். |
1030. | இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் |
| நல்லாள் இலாத குடி. |
|
வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும். |