பக்கம் எண் :

திருக்குறள்207பொருள்

104. உழவு
 

1031.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.
 

பல  தொழில்களைச்  செய்து சுழன்று  கொண்டிருக்கும்  இந்த உலகம்,
ஏர்த்தொழிலின்    பின்னேதான்    சுற்ற  வேண்டியிருக்கிறது.   எனவே
எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
 

1032.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா

தெழுவாரை எல்லாம் பொறுத்து.
 

பல்வேறு  தொழில்  புரிகின்ற  மக்களின்  பசி போக்கிடும் தொழிலாக
உழவுத்தொழில்  இருப்பதால்  அதுவே  உலகத்தாரைத்   தாங்கி  நிற்கும்
அச்சாணி எனப்படும்.
 

1033.

உழதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.
 

உழுதுண்டு   வாழ்பவர்களே   உயர்ந்த   வாழ்வினர்;   ஏனென்றால்,
மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
 

1034.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.
 

பல அரசுகளின் நிழல்களைத்  தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும்
வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
 

1035.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.
 

தாமே  தொழில் செய்து  ஊதியம்  பெற்று உண்ணும் இயல்புடையவர்,
பிறரிடம் சென்று  கையேந்த  மாட்டார்,  தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும்
ஒளிக்காமல் வழங்குவார்.