பக்கம் எண் :

திருக்குறள்1அறம்

1. வழிபாடு
 

1.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

 

அகரம்   எழுத்துக்களுக்கு   முதன்மை;  ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
 

2.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

 

தன்னைவிட   அறிவில்  மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி
நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும்  அதனால்
என்ன பயன்? ஒன்றுமில்லை.
 

3.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

 

மலர்   போன்ற   மனத்தில்  நிறைந்தவனைப்      பின்பற்றுவோரின்
புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
 

4.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

 

விருப்பு  வெறுப்பற்றுத்  தன்னலமின்றித்   திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
 

5.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

 

இறைவன்   என்பதற்குரிய   பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற
விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.