பக்கம் எண் :

குடியியல்208கலைஞர் உரை

1036.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேமென் பார்க்கும் நிலை.
 

எல்லாப்  பற்றையும்  விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின்
கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.
 

1037.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.
 

ஒருபலம்  புழுதி, காற்பலம்  ஆகிற அளவுக்குப் பலமுறை  உழுதாலே
ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
 

1038.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.
 

உழுவதைக்  காட்டிலும்  உரம்  இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர்
பாய்ச்சுவதும்  மிகவும்  நல்லது;  அதைவிட  நல்லது   அந்தப்  பயிரைப்
பாதுகாப்பது.
 

1039.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்

தில்லாளின் ஊடி விடும்.
 

உழவன்,  தனது   நிலத்தை   நாள்தோறும்   சென்று   கவனிக்காமல்
இருந்தால்,  அவனால்  வெறுப்புற்று  விலகியிருக்கும்  மனைவிபோல அது
விளைச்சலின்றிப் போய்விடும்.
 

1040.

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.
 

வாழ வழியில்லை  என்று  கூறிக்கொண்டு  சோம்பலாய் இருப்பவரைப்
பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.