பக்கம் எண் :

திருக்குறள்209பொருள்

105. நல்குரவு
 

1041.

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.
 

வறுமைத்   துன்பத்துக்கு   உவமையாகக்   காட்டுவதற்கு    வறுமைத்
துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.
 

1042.

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.
 

பாவி   என   இகழப்படுகின்ற   வறுமைக்   கொடுமை   ஒருவருக்கு
ஏற்பட்டுவிட்டால்    அவருக்கு    நிகழ்காலத்திலும்,    வருங்காலத்திலும்
நிம்மதி என்பது கிடையாது.
 

1043.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குர வென்னும் நசை.
 

ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது
அவனுடைய   பரம்பரைப்   பெருமையையும்,   புகழையும்   ஒரு  சேரக்
கெடுத்துவிடும்.
 

1044.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.
 

இல்லாமை  எனும்  கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த
சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.
 

1045.

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.
 

வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள்
கிளர்ந்தெழும்.