பக்கம் எண் :

குடியியல்210கலைஞர் உரை

1046.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.
 

அரிய பல்  நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும்,
அதனைச்  சொல்பவர்  வறியவராக   இருப்பின்  அக்கருத்து  எடுபடாமற்
போகும்.
 

1047.

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.
 

வறுமை  வந்தது  என்பதற்காக, அறநெறியிலிருந்து  விலகி நிற்பவனை,
அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.
 

1048.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.
 

கொலை   செய்வதுபோல  நேற்றுக்   கொடுமைப்  படுத்திய  வறுமை,
தொடர்ந்து  இன்றைக்கும்  வராமல்  இருக்க வேண்டுமே என்று வறியவன்
ஏங்குவான்.
 

1049.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பா டரிது.
 

நெருப்புக்குள்   படுத்துத்  தூங்குவதுகூட  ஒரு  மனிதனால்  முடியும்;
ஆனால்  வறுமை  படுத்தும்   பாட்டில்   தூங்குவது   என்பது  இயலாத
ஒன்றாகும்.
 

1050.

துப்புர வில்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
 

ஒழுங்குமுறையற்றதால்   வறுமையுற்றோர்,   முழுமையாகத்   தம்மைத்
துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.