பக்கம் எண் :

குடியியல்212கலைஞர் உரை

1056.

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

யெல்லா மொருங்கு கெடும்.
 

இருப்பதைக்    கொடுக்க    மனமின்றி     மறைத்திடும்   இழிநிலை
இல்லாதவர்களைக்  கண்டாலே,  இரப்போரின்  வறுமைத் துன்பம் அகன்று
விடும்.
 

1057.

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்ப துடைத்து.
 

இழித்துப்  பேசாமலும்,  ஏளனம்   புரியாமலும்  வழங்கிடும்   வள்ளல்
தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால்
இன்பமுறும்.
 

1058.

இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.
 

வறுமையின் காரணமாக  யாசிப்பவர்கள்,  தம்மை  நெருங்கக்  கூடாது
என்கிற   மனிதர்களுக்கும்,    மரத்தால்   செய்யப்பட்டு    இயக்கப்படும்
பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.
 

1059.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை.
 

இரந்து  பொருள்  பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப்
புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
 

1060.

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.
 

இல்லை   என்பவரிடம்,   இரப்பவன்   கோபம்  கொள்ளக்  கூடாது.
தன்னைப்  போலவே  பிறர்  நிலைமையும்  இருக்கலாம் என்பதற்குத் தன்
வறுமையே சான்றாக இருக்கிறதே.