பக்கம் எண் :

திருக்குறள்213பொருள்

107. இரவச்சம்
 

1061.

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்.
 

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும்  இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட,
இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.
 

1062.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.
 

பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால்
இந்த உலகத்தைப்  படைத்தவனாகச்  சொல்லப்படுபவனும்  கெட்டொழிந்து
திரியட்டும்.
 

1063.

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்.
 

வறுமைக்கொடுமையைப்  பிறரிடம்  இரந்து   போக்கிக்  கொள்ளலாம்
என்று கருதும் கொடுமையைப்போல் வேறொரு கொடுமை இல்லை.
 

1064.

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு.
 

வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட
நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.
 

1065.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த

துண்ணலின் ஊங்கினிய தில்.
 

கூழ்தான்  குடிக்கவேண்டிய   நிலை   என்றாலும்,  அதையும்  தானே
உழைத்துச்   சம்பாதித்துக்    குடித்தால்    அதைவிட    இனிமையானது
வேறொன்றும் இல்லை.