1066. | ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் |
| கிரவின் இளிவந்த தில். |
|
தாகம் கொண்டு தவிக்கும் ஒரு பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக்கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை. |
1067. | இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற் |
| கரப்பார் இரவன்மின் என்று. |
|
கையில் உள்ளதை மறைத்து 'இல்லை' என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன். |
1068. | இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் |
| பார்தாக்கப் பக்கு விடும். |
|
இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும். |
1069. | இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள |
| உள்ளதூஉம் இன்றிக் கெடும். |
|
இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது. |
1070. | கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் |
| சொல்லாடப் போஒம் உயிர். |
|
இருப்பதை ஒளித்துக்கொண்டு 'இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ? |