பக்கம் எண் :

திருக்குறள்217இன்பம்

109. தகை அணங்குறுத்தல்
 

1081.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.
 

எனை வாட்டும் அழகோ!  வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு
மயங்குகிறதே நெஞ்சம்.
 

1082.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.
 

அவள்  வீசிடும்  விழிவேலுக்கு   எதிராக   நான்  அவளை  நோக்க,
அக்கணமே  அவள் என்னைத்  திரும்ப நோக்கியது, தானொருத்தி மட்டும்
தாக்குவது போதா  தென்று, ஒரு  தானையுடன் வந்து என்னைத் தாக்குவது
போன்று இருந்தது.
 

1083.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.
 

கூற்றுவன்  எனப்படும்  பொல்லாத  எமனை,  எனக்கு  முன்பெல்லாம்
தெரியாது;  இப்போது  தெரிந்து  கொண்டேன்.  அந்த  எமன்  என்பவன்
பெண்ணுருவத்தில்   வந்து    போர்   தொடுக்கக்கூடிய   விழியம்புகளை
உடையவன் என்ற உண்மையை.
 

1084.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக் கமர்த்தன கண்.
 

பெண்மையின்  வார்ப்படமாகத்  திகழுகிற  இந்தப் பேதையின் கண்கள்
மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?
 

1085.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து.
 

உயிர்பறிக்கும்  கூற்றமோ?  உறவாடும்  விழியோ?  மருட்சிகொள்ளும்
பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த  மூன்று கேள்விகளையும்
எழுப்புகிறதே.