பக்கம் எண் :

திருக்குறள்219இன்பம்

110. குறிப்பறிதல்
 

1091.

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
 

காதலியின்  மைதீட்டிய  கண்களில்  இரண்டு  வகையான  பார்வைகள்
இருக்கின்றன; ஒரு  பார்வை  காதல்  நோயைத் தரும் பார்வை; மற்றொரு
பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.
 

1092.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.
 

கள்ளத்தனமான  அந்தக்   கடைக்கண்   பார்வை,  காம  இன்பத்தின்
பாதியளவைக் காட்டிலும் பெரிது!
 

1093.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.
 

கடைக்கண்ணால்   அவள்  என்னைப்  பார்த்த  பார்வையில்  நாணம்
மிகுந்திருந்தது;  அந்தச்  செயல்  அவள்   என்மீது   கொண்ட  அன்புப்
பயிருக்கு நீராக இருந்தது.
 

1094.

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும்.
 

நான்   பார்க்கும்போது  குனிந்து   நிலத்தைப்    பார்ப்பதும்,   நான்
பார்க்காத  போது  என்னைப்  பார்த்துத்  தனக்குள்  மகிழ்ந்து  புன்னகை
புரிவதும் என்மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?
 

1095.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.
 

அவள்  என்னை  நேராக  உற்றுப்  பார்க்கவில்லையே   தவிர,  ஒரு
கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு
தனக்குள் மகிழ்கிறாள்.