பக்கம் எண் :

திருக்குறள்221இன்பம்

111. புணர்ச்சி மகிழ்தல்
 

1101.

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.
 

வளையல்  அணிந்த  இந்த  வடிவழகியிடம்;  கண்டு மகிழவும், கேட்டு
மகிழவும்,   தொட்டு   மகிழவும்,   முகர்ந்துண்டு   மகிழவுமான   ஐம்புல
இன்பங்களும் நிறைந்துள்ளன.
 

1102.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்னோய்க்குத் தானே மருந்து.
 

நோய்களைத்  தீர்க்கும்  மருந்துகள்  பல  உள்ளன;  ஆனால், காதல்
நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.
 

1103.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.
 

தாமரைக்  கண்ணான்  உலகம்  என்றெல்லாம்  சொல்கிறார்களே, அது
என்ன! அன்பு  நிறைந்த  காதலியின்  தோளில் சாய்ந்து துயில்வது போல
அவ்வளவு இனிமை வாய்ந்ததா?
 

1104.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்.
 

நீங்கினால்    சுடக்கூடியதும்    நெருங்கினால்    குளிரக்கூடியதுமான
புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.
 

1105.

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்.
 

விருப்பமான  பொருள்   ஒன்று,  விரும்பிய  பொழுதெல்லாம்  வந்து
இன்பம்  வழங்கினால்  எப்படியிருக்குமோ  அதைப் போலவே பூ  முடித்த
பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.