பக்கம் எண் :

திருக்குறள்223இன்பம்

112. நலம் புனைந்து உரைத்தல்
 

1111.

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.
 

அனிச்ச  மலரின்  மென்மையைப்  புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால்
அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.
 

1112.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.
 

மலரைக்கண்டு  மயங்குகின்ற  நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்;
பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.
 

1113.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
 

முத்துப்பல்   வரிசை,   மூங்கிலனைய   தோள்,   மாந்தளிர்   மேனி,
மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!
 

1114.

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.
 

என்   காதலியைக்   குவளை   மலர்கள்  காண  முடிந்தால்,  "இவள்
கண்களுக்கு நாம் ஒப்பாக  முடியவில்லையே!" எனத்  தலைகுனிந்து நிலம்
நோக்கும்.
 

1115.

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை.
 

அவளுக்காக  நல்லபறை  ஒலிக்கவில்லை;  ஏனெனில்  அவள்  இடை
ஒடிந்து  வீழ்ந்துவிட்டாள்;  காரணம்,  அவள் அனிச்ச  மலர்களைக் காம்பு
நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.