பக்கம் எண் :

களவியல்224கலைஞர் உரை

1116.

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.

 

மங்கையின்   முகத்துக்கும்,    நிலவுக்கும்    வேறுபாடு   தெரியாமல்
விண்மீன்கள் மயங்கித் தவிக்கின்றன.
 

1117.

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

 

தேய்ந்தும்,  வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட,
இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!
 

1118.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.

 

முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என்
காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.
 

1119.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.

 

நிலவே!  மலரனைய  கண்களையுடைய   என்   காதல்   மங்கையின்
முகத்திற்கு    ஒப்பாக    நீயிருப்பதாய்ப்   பெருமைப்பட்டுக்   கொள்ள
வேண்டுமேயானால்  (அந்தப் போட்டியில்  நீ  தோல்வியுறாமல் இருந்திட)
பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.
 

1120.

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.

 

அனிச்ச   மலராயினும்,  அன்னப்பறவை   இறகாயினும்   இரண்டுமே
நெருஞ்சி  முள்  தைத்தது  போல்  துன்புறுத்தக்   கூடிய அளவுக்கு, என்
காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.