பக்கம் எண் :

திருக்குறள்225இன்பம்

113. காதற்சிறப்பு உரைத்தல்
 

1121.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர்.
 

இனியமொழி  பேசுகின்ற  இவளுடைய  வெண்முத்துப்  பற்களிடையே
சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.
 

1122.

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொ டெம்மிடை நட்பு.

 

உயிரும்    உடலும்    ஒன்றையொன்று    பிரிந்து    தனித்தனியாக
இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.
 

1123.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற் கில்லை யிடம்.

 

நான்   விரும்புகின்ற   அழகிக்கு    என்    கண்ணிலேயே   இடம்
கொடுப்பதற்காக -   என்   கண்ணின்  கருமணியில்   உள்ள  பாவையே!
அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!
 

1124.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கும் இடத்து.

 

ஆய்ந்து   தேர்ந்த  அரிய  பண்புகளையே  அணிகலனாய்ப்  பூண்ட
ஆயிழை  என்னோடு  கூடும்போது,  உயிர் உடலோடு கூடுவது போலவும்,
அவள்  என்னைவிட்டு  நீங்கும்போது  என்னுயிர்   நீங்குவது  போலவும்
உணருகிறேன்.
 

1125.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

 

ஒளி   கொண்டிருக்கும்   விழிகளையுடைய   காதலியின்  பண்புகளை
நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.