114. நாணுத் துறவுரைத்தல் |
1131. | காமம் உழந்து வருந்தினார்க் கேம |
| மடலல்ல தில்லை வலி. |
|
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர, வலிமையான துணை வேறு எதுவுமில்லை. |
1132. | நோனா உடம்பும் உயிரும் மடலேறும் |
| நாணினை நீக்கி நிறுத்து. |
|
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன். |
1133. | நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் |
| காமுற்றார் ஏறும் மடல். |
|
நல்ல ஆண்மையையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன். |
1134. | காமக் கடும்புனால் உய்க்குமே நாணொடு |
| நல்லாண்மை என்னும் புணை. |
|
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது. |
1135. | தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு |
| மாலை உழக்கும் துயர். |
|
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள். |